Thursday 27 February 2014

Leave a Comment

நாய்க்குப் பிறகு படத்தில் முக்கியமான கேரக்டர் எனக்கு தான் - சிபிராஜ் உடன் ஒரு சந்திப்பு..!



'சார் விளையாட்டு இல்லை... உண்மையிலேயே தமிழ்ல இந்தப் படம் புதுசா இருக்கும். ஒரு நாய்தான் ஹீரோ. அது படம் முழுக்க பல சாகசங்கள், அதிரடிகள் பண்ணும். அந்த நாய்க்குப் பிறகு படத்தில் முக்கியமான கேரக்டர் எனக்கு!'' - சொந்தத் தயாரிப்பில் உருவாகும் 'நாய்கள் ஜாக்கிரதை’ படத்துக்கு சுவாரஸ்ய அறிமுகம் கொடுக்கிறார் சிபிராஜ்.

''ஒரு சிச்சுவேஷன்ல நானும் அந்த நாயும் ஒண்ணா இருக்கணும். ஏன்னா, நாயோட உதவி இல்லாம என்னால் எதுவும் செய்ய முடியாது. அது ஏன் நாயால் மட்டும் அந்த விஷயத்தைப் பண்ண முடியுது, அப்படி என்ன பிரச்னை, அந்த நாய் என்கிட்ட எப்படி வரும்... இப்படி அடுக்கடுக்கா விரியும் ஆச்சரியங்கள்!

'அட, நாயை வெச்சு ஏகப்பட்ட ஹாலிவுட் சினிமா வந்திருக்கு. அதைச் சுட்டுட்டாங்க’னு உடனே கிளம்பிருவாங்க நம்ம ரசிகர்கள். நிச்சயம் எங்க படம் ஹாலிவுட் படங்களின் இன்ஸ்பிரேஷன்தான். ஆனா, கதை, சம்பவங்கள், த்ரில் எல்லாமே புதுசா இருக்கும்.

படமும், ரசிகர்களுக்குப் புதுசா இருக்கும். குழந்தைகளுக்குப் பிடிக்கும். வித்தியாசமான ஆக்ஷனா இருக்கணும்னு பல விஷயங்கள் யோசிச்சு நம்பிக்கை வந்த பிறகுதான் 'நாணயம்’ படம் இயக்கிய என் நண்பன் சக்தியிடம் பேசினேன். 'நாய்கள் ஜாக்கிரதை’னு பேர்ல ஆரம்பிச்சு கதை வரை எல்லாமே அட்டகாசமாத் தயார் பண்ணிட்டார்.

கதை, திரைக்கதை எல்லாம் ஃப்ரீஸ் பண்ணிட்டுப் பார்த்தா... நாய் கேரக்டர்தான் படத்துல ஹீரோவா இருக்கு. எனக்கு செகண்ட் ஹீரோ கேரக்டர்தான்!''

''உங்க 'ஹீரோ’ பத்திக் கொஞ்சம் சொல்லுங்க?''

''பெல்ஜியன் ஷெப்பர்ட் வகையைச் சேர்ந்த அந்த நாய்க்குப் பேர் 'இடோ’. ராணுவத்தில் வேலை பார்க்கிறதுக்காகப் பயிற்சி பெற்ற நாய். வெடிபொருள்களை மோப்பம் பிடிச்சுக் கண்டுபிடிக்கிறது, ஒருத்தரைத் துரத்தும்போது 10 அடி தூரம் பாய்ஞ்சு பிடிக்கிறது, சத்தமே இல்லாமல் தடைகளைக் கடந்து போறது, பயிற்சியாளரின் கண் அசைவைப் பார்த்துக் காரியம் செய்றது, சுவரைத் தாண்டுறது, ஏணி மேல ஏறுறதுனு ஒரு கமாண்டோவுக்குச் சமமான பயிற்சிகள் எடுத்திருக்கு இடோ.

இதைத் தேடிக் கண்டுபிடிச்சது பெரிய கதை. ஏகப்பட்ட இடங்கள்ல இப்படி இப்படி ஒரு நாய் வேணும்னு தேடிப் பார்த்துக் கிடைக்காம, 'நடிக்க நாய் தேவை’னு ட்விட்டர்ல ஒரு ட்வீட் போட்டிருந்தேன். அதை வெங்கட்பிரபு சார் ரீ-ட்வீட் பண்ணினார்.

அவரை ஃபாலோ பண்ணும் பிரபல நாய் உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் என்னை ஃபேஸ்புக்ல பிடிச்சு, பெங்களூருல ஒரு நாய் பயிற்சி மையம் பத்தி தகவல் சொன்னார். அந்தப் பயிற்சி மையத்தின் உரிமையாளர் மசூத், 'இது மிலிட்டரிக்காகப் பயிற்சியெடுத்த நாய். வெளி ஆளுங் களுக்குத் தர முடியாது’னு பிடிவாதம் பிடிச்சார். 'எனக்கும் நாய்கள்னா ரொம்பப் பிரியம். நாயை நல்லாப் பார்த்துக்கு வேன்’னு கெஞ்சிக் கூத்தாடி இடோவைக் கூட்டிட்டு வந்தோம்!''

''கால்ஷீட் சொதப்பாமல், ரீ-டேக் வாங்காம சொன்னதைக் கேட்டு ஒழுங்கா நடிச்சாரா உங்க 'ஹீரோ’?''

''ஹையோ... இப்போதாங்க தெரியுது அந்தக் காலத்துல ஏன் குரங்கு, கரடி கேரக்டர்கள்ல மனுஷங்களே நடிச்சாங்கனு! ராணுவப் பயிற்சி எடுத்த நாய்க்கு முன்னாடி கத்திப் பேசினாலோ, வேகமா ஓடினாலோ, உடனடியாத் தாக்கணும்னு அது பழக்கப்படுத்தப்பட்டு இருக்கும். ஒரு மனுஷன் இன்னொரு மனுஷனைத் துன்புறுத்துறான்னு அது நினைச்சா, ஓடிப்போய் கடிச்சிடும். அதுக்கு முன்னாடி யாரு ஓடினாலும் அதைப் பொறுத்தவரை அவன் திருடன்;

அல்லது கெட்டவன். துரத்த ஆரம்பிச்சிடும். இவ்வளவு கட்டுப்பாடுகளுக்கு நடுவுல நாயை மிரளவிடாம, நாம நினைச்சதை நடிக்கவெச்சு, மத்தவங்க சொதப்பாம ஷாட் ஓ.கே. பண்றது... நிஜமா சொல்றேன்... நாய் பட்ட பாடு!

நான் இடோகூட பயங்கர க்ளோஸ் ஆகிட்டாலும், இது வரை 10, 12 கடி வாங்கியிருக்கேன். படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே ஆன்டி-வைரல் இன்ஜெக்ஷன் போட்டுக்கிட்டுத்தான் நடிச்சேன். என்னைக் கடிச்சதால நாய்க்கு எதுவும் ஆகலையானு கேப்பீங்க.

அதுக்கும் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கோம். பிராணிகள் நல வாரியம் சொல்ற அத்தனை பாதுகாப்பு வழிமுறைகளையும் கடைப்பிடிச்சுத்தான் படம் பிடிக்கிறோம்!''

'' 'ஹீரோ’ அப்பா காரணமா சினிமாவில் ஹீரோவா நடிக்க வந்த வாரிசுகள் சிலர் ஜெயிக்கிறாங்க. பலர் தடுமார்றாங்க. ஆனாலும் அடுத் தடுத்து நிறைய பேர் வந்துட்டே இருக்காங்க. அப்படி வர்றவங்களுக்கு உங்க டிப்ஸ் என்ன?''

''அந்த வாரிசுகளுக்கு என்ட்ரி ஈஸி. ஆனா, எதிர்பார்ப்பு அதிகமா இருக்கும். மிக முக்கியமா அப்பாவோட அவங்களை ஒப்பிடுவாங்க. 'அப்பா அளவுக்கு வளர முடியாமப் போயிடுமோ’னு நமக்கு பயம் இருக்கக் கூடாது. நாம தனி மனுஷன். கடினமா உழைக்கப் போறோம்; நாம நடிச்ச படம் நல்லா இருந்தா ஓடப்போகுது!''

0 comments:

Post a Comment