Friday 28 February 2014

Leave a Comment

இளையராஜாவின் சகோதரர்களை கலக்கிய பாலு, பாரதிராஜா மோதல்..!



நடிப்புத் திறமையை காட்ட நடத்திய நாடகம் பாலு  சினிமாவில் பாட ஆரம்பித்த காலத்தில்தான் பாரதிராஜாவைச் சந்தித்தார். இளையராஜாவை பாலுவிற்கு தெரியும். அந்தக் காலகட்டத்தில் பாரதிராஜாவின் அறிமுகம் பாலுவிற்குக் கிடைத்தது.

பாலு வெளியூர் கச்சேரிகளுக்குப் போகும்போது பாரதிராஜா ஓய்வாக இருந்தால், அவருடன் செல்வது வழக்கம். காரில் பாலு சென்றால், முன் சீட்டில் அவர் பக்கத்தில் அமர்ந்து பாலுவிடம் தனது எதிர்கால சினிமா உலகக் கனவுகளைக் கூறுவது பாரதிராஜாவின் வழக்கம். தான் சினிமா உலகில் சாதனை புரிய வேண்டும் என்ற வெறி அந்தக் காலத்திலேயே பாரதிராஜாவின் உள்ளத்தில் ஒரு தீயாக எரிந்து கொண்டிருந்தது.

ஒரு சமயம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலுவின் கச்சேரி நடைபெற்றது. பாலுவுடன் பாரதிராஜாவும் சென்றிருந்தார். பாரதிராஜா பாலுவின் அறையில் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு ஜடத்தைக் கூட தன்னால் நடிக்க வைக்க முடியும் என்று பெருமையுடன் கூறிக் கொண்டிருந்த போதுதான், அந்த விபரீத யோசனை பாலுவுக்குத் தோன்றியது. பாரதிராஜாவிடம் ‘உனக்கு நடிக்கச் சொல்லிதர முடியும் என்ற நம்பிக்கை இருக்கு.

அதையும் ‘டெஸ்ட்’ பண்ணிப் பார்த்து விடுவோம். நானும் நீயும் இப்பொழுது ஒரு சண்டை போட்டுக் கொள்ள வேண்டும்.

அந்தச் சண்டை உண்மையானதாக மற்றவர்களுக்கு தோற்றமளிக்க வேண்டும். அப்படி நம் குழுவில் இருப்பவர்கள் நமது சண்டையை நம்பினால் உண்மையிலேயே உனக்கு நடிக்கிற திறமையிருக்கு உன்னாலும் நடிப்புச் சொல்லித்தர முடியும் என்று ஏத்துக்கிறேன்’ என பாலு கூற உற்சாகமாக பாலுவின் சவாலை ஏற்றார் பாரதிராஜா.

உடனே பாரதிராஜா பாலுவைப் பார்தது ‘நீ என்ன? உன் மனசுக்குள்ள பெரிய முகமது ரபின்னு நினைப்போ? நாலு சினிமாவில் பாடினதுக்கே இவ்வளவு கொழுப்பா?’ என்று கேட்க அதற்கு பாலு ‘நானாவது நாலு படத்தில் பாடியிருக்கேன். சினிமாவுக்குள்ள நுழையாமலே உனக்கு பெரிய சாந்தாராம் என்ற நினைப்பா?’ என்று கேட்க வார்த்தைகள் பின்னி சிறிய வாக்குவாதம் பெரிய சண்டையாக உருவெடுத்தது.

இவர்கள் சண்டை போட்டுக் கொண்டு ரூமை விட்டு வெளியே வர இவர்களின் குரலைக்கேட்டு இளையராஜாவின் சகோதரர் பாஸ்கர், கங்கை அமரன், மற்றும் இசைக்குழுவினர் வெளியே வர, பாரதிராஜாவும், பாலுவும் சண்டை போடுவது ஒரு பெரிய குழப்பத்தை அவர்களிடத்தில் ஏற்படுத்தியது.

ஒரு கட்டத்தில் பாலுவும், பாரதிராஜாவும் கை கலக்கும் அளவிற்குப் போய்விட்டவுடன், பாஸ்கரும் அமரனும் இருவரையும் பிரித்துவிட்டார்கள். தங்கள் ஊரைச் சேர்ந்த பாரதிராஜாவுடன் பாலு சண்டை போட்டது பாஸ்கருக்குப் பிடிக்கவில்ல.

அதே நேரத்தில் சாதுவான பாலுவிற்குப் கோபம் வரும்படி பாரதிராஜா நடந்துகொண்டது அமரனுக்குப் பிடிக்கவில்லை. அதே நேரத்தில் ஒற்றுமையான குழுவின் இடையே இப்படியொரு பிளவு ஏற்பட்டதை யாராலும் தாங்க முடியவில்லை.

 ஒரு மாதிரியாக சண்டை ஓய்ந்து, பாலுவும் பாரதிராஜாவும் நடித்ததாகக் கூற இவர்கள் சண்டையைப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த பாஸ்கரும், கங்கை அமரனும் கோபம் தாங்காமல், பாலுவையும் பாரதிராஜாவையும் அடிக்கவே வந்து விட்டனர்.

0 comments:

Post a Comment